செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஓலைத்துடிப்புகள் (2)

ஓலைத்துடிப்புகள் (2)
===========================================ருத்ரா  இ.பரமசிவன் 

ஐங்குறு நாறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). நேற்று நள்ளிரவில் அவர் வரிகள் எனக்குள்ளேயே கவிதை எழுதும் தினவை அந்த புளிங்காய்ச்சுவை ஏற்றி படாத பாடு படுத்தியது.அதன் விளவே இந்த "உன் உரு தின்னும்.." கவிதை.


ன் உரு தின்னும்...
=========================================ருத்ரா இ.பரமசிவன் 

புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.
இலவு தொங்கும் காட்சிகள் மலியும் 
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை 
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.
கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும் 
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும் 
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?
கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!

============================================




பொழிப்புரை
===========================================ருத்ரா இ.பரமசிவன் 


புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.




தலைவன் பொருள் ஈட்ட கடுவழி ஏகிய பின் தலைவி அவன் நினைவு வாட்ட துயர் உறும் நிலையே இப்பாடல்.அவள் கருவுற்ற‌ நிலையில் எதைத் தின்போம் என்ற மசக்கைத்துன்பம் அடைந்து பெரிதும் வாடுகிறாள்.புளியங்காய் தின்கிறாள்.மண் அளைந்து சுவைப்பதும் அதன் சுவைக்கு ஒளிபொருந்திய வாயின் நீர் ஊறி வழிந்து நூல்போல அருவியாய்  அசைந்த நீர்ப்படலமாய் பெருகும் காட்சியும் அங்கே விளங்குகிறது. சாம்பல் கூட தின்று பார்த்து அச்சுவையின் அருமையைக்கண்டு வியந்து இது என்ன சுவையாய் என்று இருக்கலாம் என்று ஒப்பு நோக்குகிறாள்.அறுசுவைகள் கூட பிடிக்காமல் போகும் தனிச்சுவை அல்லவா இது.

இலவு தொங்கும் காட்சிகள் மலியும் 
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை 
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.


அவன் பொருள் தேடி சென்ற அந்த இலவங்காட்டில் இலவங்காய்கள் காய்த்து தொங்கும்.நிலாப்பிறைகள் போல பச்சைக்காய்கள் ஊஞ்சல் ஆடி தொங்கும்.அத்தகைய அடர் காட்டின் கடக்க அரியதாய் உள் நுழைய இயலாததாய் விளங்கும் கடுவழியை விலக்கி வேறு வழி செல்ல முடியாத அப்படிப்பட்ட கடும்பயணம் எல்லாம் எதற்கு?" தலைவி தவிக்கிறாள். "பொருள் தேடிய வரை போதும்.தார் குச்சியை செலுத்தி தேரின் குதிரையை விரைந்து செலுத்துவாயாக.என் விழிகளை மலர்கள் என்பாயே.பார் அவை இப்போது உன்னைக்காண முடியாமல் முள் மரங்களில் சிக்கியதைப் போல் வேதனை கொள்கின்றன.இவை என்னால் தாங்க இயலுமோ?" என்கிறாள்



கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும் 
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும் 
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்


தலைவின் கருவுற்ற நிலையின் துயரம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."நெருப்பு மூட்டிய பின் போல் வளரும் அந்த உயிரின் கரு கேட்கும் சுவை என்னைத்தின்கிறது.அச்சுவை எதை ஒத்து இருக்கின்றதென (செத்தென அறியேன்) நான் அறிய மாட்டேன்.இப்படி கருவால் தின்னப்படும் என்னை உன் காதல் பொங்கும் உருவம் வேறு தின்ன வருகிறது.இந்த பெருஞ்சுவைப் பசியில் நோதல் உற்று இம்மலை கடல் விண் மற்றும் 
விண்மீன்கள் ஆகிய எல்லாம் தின்னத்தொடங்கிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.நீ வரும் தேரும் வழியும் கூட ஆர்வம் மிக்க என் கண்கள் தேடும் பசியின் சுவையில் தின்னப்பட்டு விடலாம்.அதனால் விரைந்து தேரை செலுத்து.இக்காதலில் கொடிய நோய் (கருவுற்ற மசக்கையோடு) பேரூழியாய் அழித்த பின் என்ன மிஞ்சும் என அறிவாயா?"


கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!





"உடம்பு இற்று விழும்.அதற்கு முன் என் உயிரைக் காப்பாற்று.பறவைகள் எல்லாம் குஞ்சுகளுக்கு இரையூட்ட விரைந்து வருவது போல் விரைவாயாக. வேக வேகமாக குளம்புகள் பதிய‌ஓடிவரும் சிறந்த அந்த குதிரை வலிமை ஆர்ப்பரிக்க அது செல்லும் நீண்ட வழியையும் உன் கைக்குள் அடக்கி மிக மிக வேகமாய் வருக" என்கிறாள் தலைவி நெஞ்சப் படபடப்போடு.


===========================================================ருத்ரா இ.பரமசிவன் 

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

(ஓலைத்துடிப்புகள்.1)

தொண்டை சுற்றிய குவளை
=======================================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள்.1)


நுண்சிறைத்தும்பி நுரைவிரித்தாங்கு
நுவலும் அதிர்வின் நரல் மொழி உய்த்து
கொண்டல் நாடன் கொழு நிழல் தழீஇ
தொண்டை சுற்றிய குவளையன்ன‌
தொடிநெகிழ் பசலை நோன்ற காலை
நோக்கும் நெடும் தேர் மணி இமிழோசை.



பொழிப்புரை
========================================

நுண்சிறகுகள் நுரை படர்ந்தாற்போல் அதிர‌
அதனுள் ஒலிக்கும் காதலனின் இன் சொல் உற்றுக்கேட்டு
மகிழ்கிறாள் காதலி.காதலன் நாட்டின் மழை மேகம் மறைக்கும்
அடர்ந்த நிழலில் அவன் நினைப்பில் தழுவிக்கிடக்கும் உணர்வை
அடைகிறாள்.தொண்டைக்கொடி சுற்றிய குவளை மலர் போல‌
அவன் தழுவலுக்கு ஏங்கி அவள் "தொடி" நெகிழும் வண்ணம்
பசலையுற்றாள்.அப்போது ஏக்கத்தோடு காதலனின் தேர் மணி ஒலிக்கும் ஓசையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.சங்க நடைக் கவிதையில் இது காதலின் எழில் பொங்கும் ஒரு காட்சி.

======================================================ருத்ரா

வெள்ளி, 6 நவம்பர், 2015

வேம்பு நனை ஈர்ங்கண்

வேம்பு நனை ஈர்ங்கண்
========================================ருத்ரா

வேம்பு நனை ஈர்ங்கண் அலவன் ஆர்ப்ப
தூம்பு கொள் நறவின் மணிச்சிறைத்  தும்பி
அயல் சினை சேக்கும் அரிமணற் சேர்ப்ப!
ஓங்கு பூ வேழத்து உளை அலரி செறித்த
விரி இமைப் பூமயிர் அவள் உண்கண் வீழ்ந்து
மல்லல் களிற்று மருப்பு மாய்ந்தன்ன
புண்பட்டனை என்னை.அறிகுவை இஃது
அவள் பால் பட்ட காதல் மாத்திறம் .
அறிகுவை!அறிகுவை! மற்று எற்றுக்கு
நின் வெண்முத்துக்குடையும் ஆனை நிரையும்?
அவள் விழிநாடு வெல்லுதல் இயலுமோ?
வளை நரல் பௌவம் கலன் ஊர்பு துறைவ‌
வளை கொண்டு நகை செயும் அவள் நுண் திறம்
ஈண்டு நினக்கு இறை ஈயுமோ அறிதி மன்னே!

பொழிப்புரை
============

தமிழ்ச்சொல்லில் "நனை" என்பதற்கு பூவின் சிற்றரும்பு என்ற பொருள் உண்டு என நான் அறிந்து மிகவும் வியப்பு உற்றேன்.சொல்லின் பொருள் வழங்கும் பரிணாமத்தில் நம் தமிழின் சிறப்பு வெளிப்படுகிறது.நனை என்றால் ஈரப்படுதல் என்று தான் நமக்குத்தெரியும். ஆனால் வைகறையின் குளிர் பூம்பொழுதில்  முதலில் நனைவது சிறு
பூக்களின் மெல் அரும்புகள் தான்.அவை நனைந்து "பூவாய்" விரியும் இயற்கையை தமிழ்ப்புலவர்கள் நுட்பத்துடன் கண்டிருக்கிறார்கள்.
எனவே நனை என்ற வினைச்சொல்லின் அடியாய் இந்த "நனை" என்ற வினை ஆகுபெயரே 
அந்த "சிறு பூவின்" அரும்புக்கு ஆகி வந்துள்ளது. ஒப்பற்ற கற்பனை வளம் மிக்க கவிஞர் "ஓதல் ஆந்தையார்" "ஐங்குறுநூறு" மருதத்திணையில்
(30 ஆம் செய்யுள்) 

"வேம்புநனை அன்ன நெடுங்கண் களவன்"

என்று நண்டின் கண்ணுக்கு உவமையாக வேப்பம்பூவின் நுண் அரும்பை பாடியிருக்கிறார். இந்த வியப்பில் விரிந்த என் கற்பனையின் விளைவே இச்சங்கநடைச் செய்யுள்.

இனிச்செய்யுளின் பொருளுரைக்கு வருவோம்.

(தொடரும்)